Subscribe:

Pages

Friday, April 23, 2010

பனி மலைகளினூடே… ஒரு பயணம்.

          
          கடந்த நான்கு மாதமாக நிறைய பனி ம‌ழை பொழிந்ததால் மலைகள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கும் என்று மனதில் கற்பனையாய் காட்சிகள் விரிய ஜனவரி மாதமே போகலாம் என்று நினைத்திருந்தும் அதிகபட்ச பனியால் மலை பாதைகள் எல்லாம் மூடி இருந்ததால் அப்போது செல்வது பாதுகாப்பானது அல்ல என்று நினைத்து, சென்ற மாதம்தான் போய் வந்தோம்.

750m altitudeல் உள்ள Castellane என்ற ஊருக்கு மலைப்பாதைகளின் வழியே சென்றடைந்தப் பின் மீண்டும் அங்கிருந்து 1600m altitudeல் இருக்கு அழகான பனி பிரதேசமான‌ Vauplane போய் சேர்ந்தோம்.

பொதுவாக இதுபோல 100 அல்லது 150கிமீ தொலைவில் உள்ள இடங்களுக்கு செல்வது என்றால் காலையிலேயே கிளம்பி சென்று, இரவு வீடு திரும்பிவிடுவது வழக்கம். ஆனால் இம்முறை ஞாயிறு மதியம் சாப்பிட்டு முடித்ததும். "இன்னிக்கு கிளைமேட் ரொம்ப நல்லா இருக்கு. போயிட்டு வரலாமா?" என்றார் என்னவர். சென்று வர வெறும் ஐந்து மணி நேர பயணம்தானே என்று நினைத்து "ஓகே போயிட்டு வரலாம்" என்று சந்தோஷமுடன் கிளம்பினேன்.
'மறக்காம கேமிரா எடுத்து வச்சுகிட்டியா?'..... என்னவர்.
'ம்ம்... அத மறப்பேனா!....... இது நான்.

உயரத்தில் ஏற ஏற கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலைகள் எல்லாம் வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது. வழக்கம்போல அழகான இடங்களை பார்த்ததும் போட்டோ எடுக்க ஆரம்பித்தேன். முதல் இரண்டு போட்டோ நன்றாக வந்தது. அடுத்த படம் எடுக்க ஆன் பட்டனை அழுத்த, charge battery என்றது. என்ன கொடுமை இது என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போதே கேமிரா சுத்தமாக நின்று விட்டது.

ச்ச என்ன இப்படியாகிவிட்டதே..."நிறைய போட்டோஸ் எடுக்கலாம்ன்னு எவ்வளவு ஆசையோட வந்தேன்"......என்று என் புலம்பல் தொடர‌, என்னவர் என்னை நன்கு அறிந்தவராய் "இப்ப என்ன, blogல போட போட்டோஸ் வேணும் அவ்வளவுதான. என் மொபைல எடுத்துக்கலாம்" என்றார். என்னதான் அவரோட மொபைளில் அழகா போட்டோக்கள் எடுக்கலாம் என்று மனது சமாதானம் ஆனாலும் Sony cyber-shot போல வருமா? என்ற கேள்வி எனக்குள்!

உச்சியை அடைந்த போது சுற்றிலும் பனி. நீல நிற வானமும் வெள்ளை மலைகளும் சூப்பர் கலர் காம்பினேஷனில் பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது.

அந்த அழகினை ரசித்துக்கொண்டிருந்த என் கவனத்தை கவர்ந்தான் ஒரு ஐந்து வயது சிறுவன். மேலிருந்து skatingல் மிக வேகமாக வளைந்து நெளிந்து இறங்கி கொண்டு இருந்த அவனை பார்த்து நான் பயந்தே போனேன். ஆனால் அவனோ அவன் அப்பா அம்மாவோ எந்த பயமுமின்றி அவர்கள் முன்னால் இறங்க பின்னாலே அச்சிறுவனும் குறிப்பிட்ட நிறுத்தும் இடத்திற்கு வந்ததும் மிகச்சரியாக ஸ்லோ செய்து நிறுத்திய அவனை கண்டு வியந்தேன். வருங்கால Championனை இப்போதே பார்த்துவிட்ட சந்தோஷம் எனக்கு! நமக்கு தெரியலைன்னாலும் செய்பவர்களை பார்த்து திருப்தி கொள்ள‌ வேண்டுமல்லவா... அப்படிதான் வெகு நேரமாக விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவனை ஆர்வத்துடன் (கொஞ்சம் பயத்துடனும்) பார்த்து ரசித்தேன்.

சூரியனின் வெப்பம் குறைய ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்தவர்கள் ஒருவர்பின் ஒருவராக கிளம்பத்தொடங்கினர். நாங்களும் நிறைய புகைப்படங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு கீழ் இறங்க ஆரம்பித்தோம். சிறிது தூரம் இறங்கியபின் காருக்கு பெட்ரோல் போடணும் என்றார் என்னவர். சரி பனி சிகரங்களில் இருந்து இறங்கிய உடன் ஒரு சின்ன கிராமம் வரும் அங்கே போட்டு கொள்ளலாம் என்று எதிர்ப்பார்த்து சென்ற எங்களுக்கு பெரிய ஏமாற்றம். இருந்த இரண்டு பெட்ரோல் ஸ்டேஷனும் சண்டே என்பதால் மூடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் கிரிடிட் கார்ட் செல்ப் சர்வீஸ் என்று இருந்தது. எங்கள் நேரம் சரியில்லையோ என்னவோ அங்கிருந்த சர்வீஸ் சிஸ்டம் சரியாக நடக்காமல் போனது. ரிசர்வரில் இருக்கும் பெட்ரோலில் எப்படியும் கீழே இறங்கி விடலாம் என்றார் என்னவர். காரில் ‘Fuel warning’ லைட் எரிய ஆரம்பித்து எச்சரிக்கை கொடுத்த நேரமது.

எப்போதும் எதையாவது பேசிக்கொண்டிருக்கும் நான் அமைதியாக வந்தது அவ‌ருக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை. ‘ஏன் அமைதியா வர? பயமா இருக்கா? கவல படாத எப்படியும் மலைகளில் இருந்து கீழ இறங்கும் வர பெட்ரோல் இருக்கும்... ’என்றார். கார் வேகமெடுத்தாலோ அல்லது வழியை தவறவிட்டு சுற்றி கொண்டு வந்தாலோ அதிகமா பெட்ரோல் செலவாகிவிடும் என்று மிக நிதானமாக ஓட்டிக் கொண்டு வந்தார். (இதுப்போல தொலைதூர பயணம் என்றால் அதற்கு முன்தினமே டேன்க் ஃபில் பண்ணிக்கொள்வார். ஆனால் அன்று திடீரென்று கிளம்பியதால் அதை கவனிக்க தவறிய‌தால் வந்த டென்ஷன் இது)

சூரியன் முற்றிலும் மறைந்து போய் இருள் பரவ‌ எனக்கு மீண்டும் பயம் வந்து ஒட்டிக்கொண்டது. எப்படியாவது கீழே இறங்கும் வரையிலாவது பெட்ரோல் இருக்க வேண்டுமே என்று மனதில் வேண்டிக்கொண்டே வந்தேன். ஒருவழியாக மலைப்பாதைகளில் இருந்து இறங்கி மனித நடமாட்டமுள்ள சராசரி உலகிற்கு நுழைந்ததும் தான் எனக்கு நிம்மதியானது. இறங்கிய உடன் எதிர் பட்ட முதல் petrol stationல் பெட்ரோல் போட்டதும் தான் என்னவர் முகத்திலும் சின்ன சிரிப்பு வந்தது. இத்த‌னை நேரம் அவருக்குள்ளும் பயம் இருந்து இருக்கிறது என்று அந்த சிரிப்பில்தான் தெரிந்த‌து.

‘எதையுமே பிளான் பண்ணாம பண்ணா இப்படிதான்..’ இது நான்!
‘ஆமாமா, இனிமே ஒழுங்கா "பிளான்" பண்ணி போயிட்டு வருவோம்’ என என்னவர் சொல்ல சற்று முன்னால் இருந்த பயம் எல்லாம் போய் அன்று பார்த்த அழகிய காட்சிகள் கண்முன்னே வர அதைப்பற்றி பேசிக்கொண்டே சந்தோஷத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.



Stade de Vauplane

In Summer........

 


In Winter.........



மேலும் புகைப்படங்கள் அடுத்த பதிவில்........


32 comments:

AkashSankar said...

பயணக்கட்டுரை... புகைப்படத்துடன்...அருமைங்கோ... கைபேசி Sonyயா..

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு.

புகைப்படங்கள் மிக அழகு.

அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

VELU.G said...

நல்ல பயணம் போல் தெரிகிறது

படங்கள் மிக நன்றாக இருக்கின்றன

அடுத்த காட்சிகளுக்கு காத்திருக்கிறேன்

Chitra said...

poetic!
waiting to see more photos.....

எல் கே said...

nice pics priya. also make sure u charge ur camera battery before you go out next time :)

Paleo God said...

ஹும்ம்ம்ம்.... (அடிக்கிற சம்ம்மருக்கு பெருமூச்சு)

:))

--
டெர்ரர் ட்ரிப்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் pictures ... நீங்க சொன்ன விதம் இன்னும் அழகு... அழகு புகைப்படங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ப்ரியா

சீமான்கனி said...

அழகிய பயண பகிர்வு ப்ரியா...அப்டியே உங்க பனியோடு கற்பனை ஓவியம் ஒன்றும் வரைந்தால் நல்லா இருக்கும்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Priya, very nice photos..

Liked the way you explained it.. :)

ஜெய்லானி said...

படங்கள் வெகு சூப்பர் . சீக்கிரமா போடுங்க ஆர்வம் தாங்கல.

Anonymous said...

wow..

super alagana padivu..(photovai pola..)

Payathudan oru Payanm...appdithaney...

The way of presentation so cute..

v.v.s
complan surya
FIRST STANDARD,
C SECTION.

'பரிவை' சே.குமார் said...

புகைப்படத்துடன் பயணக்கட்டுரை...
அருமை.

Ahamed irshad said...

அழகான படங்கள்,அழகான கட்டுரை....

கவிதன் said...

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது ..... பாட்டு பாடிக்கிட்டே போட்டோ எடுத்தீங்களா ப்ரியா.... அழகான படங்கள் மற்றும் பதிவு

Priya said...

நன்றி அ.ஆ.பு.க.கை.அ(என்னங்க இவ்வளவு பெரிய்ய்ய்ய பேரு)
போட்டோ கேமிராதான் சோனி!

நன்றி ராமலக்ஷ்மி!
விரைவில் படங்களை போஸ்ட் செய்துவிடுகிறேன்.

நன்றி VELU.G
நல்ல பயணம்தான், கொஞ்சுன்டு பயத்தோட:)

நன்றி சித்ரா!

Thanks LK!
As you said... ya, must to be remembered!

நன்றி ஷங்கர்!
சம்மருக்கு இதமா வெண்பனிகளின் படங்களை சீக்கிரத்தில போடுறேன்!

நன்றி அப்பாவி தங்கமணி!

நன்றி கனி!
வரைய முயற்சி செய்கிறேன்!

Thanks Ananthi!

ந‌ன்றி ஜெய்லானி!
சீக்கிர‌த்தில‌ போடுறேன்.

ந‌ன்றி சூர்யா!
கொஞ்சம் ப‌ய‌மான‌ ப‌ய‌ண‌ம்தான்!

ந‌ன்றி சே.குமார்!

ந‌ன்றி அஹமது இர்ஷாத்!

ந‌ன்றி க‌வித‌ன்!
ச‌ரியா சொல்லி இருக்கிங்க‌.ஆமா என‌க்கு ரொம்ப‌ பிடித்த‌ பாட்டு. ப‌னியை பார்த்தாலே உட‌னே அந்த‌ பாட‌லை முனுமுனுக்க‌ ஆர‌ம்பித்து விடுவேன்.

r.v.saravanan said...

மேலும் புகைப்படங்கள் அடுத்த பதிவில்........

waiting...

ஜெயா said...

அழகான பயணக்கட்டுரை..அழகான படங்கள்....

சாருஸ்ரீராஜ் said...

அழகான படங்கள் .....

Raghu said...

இங்க‌ ம‌ண்டை காயுது, இதுல‌ In Summer, In Winterனுலாம் போட்டு க‌லாய்க்க‌றீங்க‌...ஹும்..என்ஜாய் என்ஜாய் :)

Madumitha said...

இங்கிட்டு
தீயாய்த் தகிக்கிறது.
அங்கே பனியா?
கொஞ்சம் அனுப்பிவிடுங்க.

Menaga Sathia said...

அழகான படங்கள்!! பயணக்கட்டுரை தொடருங்கள்...

மனோ சாமிநாதன் said...

அருமையான சிறுகதை போன்ற பதிவு!
எழுத்து நடை சரளமாக வந்திருக்கிறது1
அழகிய புகைப்படங்கள்!

அம்பிகா said...

அருமையான பகிர்வு. புகை படங்கள் கொள்ளை அழகு. மீதி படங்களுக்காக காத்திருக்கிறோம்.

மனோ சாமிநாதன் said...

ப்ரியா!

உங்கள் ஓவியங்கள் அனைத்தையும் பார்த்தேன். எல்லாமே மிக அழகு! திறமையை விட்டு விடாதீர்கள். தொடர்ந்து வரையுங்கள்!!

ஹேமா said...

ப்ரியா பொறாமையா இருக்கு.பிரயாணக் கட்டுரைன்னா இப்பிடி இருக்கவேணும்.எனக்கு இப்பிடி எழுத வரமாட்டுதாம்.அருமையா எழுதியிருக்கீங்க.வாசிக்கவே பார்த்த உணர்வு அந்தப் பனிமலைக் குளிரோடு.

Anonymous said...

ப்ரியா பொறாமையா இருக்கு.--mee too
konjam
ப்ரியா பொறாமையா இருக்கு...hahaha.

பிரயாணக் கட்டுரைன்னா இப்பிடி இருக்கவேணும்.எனக்கு இப்பிடி எழுத வரமாட்டுதாம்...ennakum varamattuku..

appram am the 25th...hey..

v.v.s complan surya

கண்ணா.. said...

சம்மரை விட விண்டரில் அருமையாக இருக்கிறது இடம்.

இஙக் கல்ப்பில் நாங்களெல்லாம் வெயிலில் வாடிக்கொண்டிருக்கும் போது இந்த மாதிரி படம் போட்டு எங்களை வெறுப்பேத்துறீங்களே.....


நல்லாருங்க.....

கண்ணா.. said...

ஆமா என்ன.. வோட் பட்டன் ஓண்ணையும் காணோம்....


நீங்க உண்மையிலயே ப்ளாக்கரா?????!!!!!!


அளவில்லா சந்தேகத்துடன்

கண்ணா..

Priya said...

நன்றி r.v.saravanan!

தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயா!

நன்றி sarusriraj!

நன்றி ரகு!
இன்னும் சில படங்கள் போடுறேன், பார்த்து என்ஜாய் பண்ணுங்க:)

நன்றி Madumitha!
மீதி படங்களும் போடுறேன் பார்த்து பனியை அள்ளிகிட்டு போங்க:)

நன்றி Mrs.Menagasathia!

நன்றி அம்பிகா!

நன்றி மனோ சாமிநாதன் மேம், உங்க வருகைக்கும் ஊக்கத்திற்கும்!

நன்றி ஹேமா!
உங்க பயணக் கட்டுரையையும் படித்தேன். அருமையா எழுதி இருக்கிங்க தோழி!

நன்றி Complan Surya!

நன்றி கண்ணா!
வெறுப்பேத்தலங்க... ச்சும்மா படங்கள பார்த்தாவது குளிர்ச்சியை அனுபவிப்பிங்கன்னுதான்:)

கண்ணா எனக்கும் ஒரு சந்தேகம்... அவசியம் இந்த ஓட்டு பட்டன் இருக்கனுமா? ஏன்னா எனக்கு அதைப்ப‌ற்றி சரியா எதுவும் தெரியாது.அதான் இனைக்காம விட்டுட்டேன்.

கண்ணா.. said...

//கண்ணா எனக்கும் ஒரு சந்தேகம்... அவசியம் இந்த ஓட்டு பட்டன் இருக்கனுமா? //

நீங்க எழுதறது இன்னும் நிறைய பேருக்கு போகணும்னா தமிழிஷ், தமிழ் மணம் போன்ற திரட்டிகளில் இணைத்து அதன் வோட்டளிப்பு பட்டையையும் இணைக்க வேண்டும்.

இது கட்டாயம் கிடையாது. நம் விருப்பம்தான்.

Priya said...

நன்றி கண்ணா!
திரும்ப வந்து விளக்கம் தந்தமைக்கு!
தமிழிஷ், தமிழ் மணம் போன்ற திரட்டிகளில் இணைத்தேன்.ஆனா விருப்பம் இல்லாததால் வோட்டளிப்பு பட்டையை சேர்க்காமல் விட்டுவிட்டேன்.

மனோ சாமிநாதன் said...

அன்பான அம்மாவுக்கு இதைவிடவும் நெகிழ்வான உணர்வுகளின் சமர்ப்பணம் வேறு இருக்க முடியாது!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ப்ரியா!

Post a Comment