Subscribe:

Pages

Thursday, September 30, 2010

ரசனை என்பது நிச்சயம் ஆண்பால்தான்!!!

அழகு என்பது பெண்பால் என்றால்
ரசனை என்பது நிச்சயம் ஆண்பால்தான்!

மிக சாதாரனமாக‌ வசீகரிக்கும் ஒன்றைகூட ஆண்கள் ரசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பெண்களின் ரசனை அமைதியானது என்றால் ஆண்களின் ரசனையோ ஆழமானதாக இருக்கிறது….குறிப்பாக பெண்களை ரசிப்பதில். பெண்கள் ஆண்களால் ரசிக்ககூடியவர்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். பெண்ணும் ஆணின் ரசனையாலேதான் அழகாக்கப்படுவதாக கருதுகிறேன். நம்மைவிட நமக்கு எது பொருத்தமாக இருக்கிற‌து என்பதில் இவர்களின் தேர்வு மிக அழகானதாக உணர்கிறேன். என் வாழ்வில் எனக்கு கிடைத்த ஆண்கள் அனைவருமே ரசனைமிக்கவர்கள் என்பதில் எப்போதும் எனக்கு பெருமை உண்டு. அப்பாவில் ஆரம்பித்து தம்பிகள், கஸின்கள், கல்லூரி நண்பர்கள், என்னவர் என அனைவருமே நல்ல ரசனை உணர்வு படைத்தவர்கள்தான்.

நான் பிறந்ததில் இருந்து இன்றுவரை என் செயல்கள் அனைத்தையும் ரசித்துக்கொண்டு இருப்பவர்… ஸ்கூல் யூனிஃபார்மில் இருந்து சுடிதாருக்கு மாறிய போதும் சரி, திருமணக்கோலத்தில் என்னை கண்ட போதும் சரி என்னை பார்த்து பார்த்து ரசித்து மகிழ்ந்த என் அப்பா………

அக்கா உனக்கு இது நல்லாயில்ல, இது நல்லா இருக்கும் என்பதாகட்டும், அதுவரை ப்யூட்டி பார்லர் போகாத நான் தோழியின் ஆலோசனைபடி என் நிச்சயதார்த்தம் அன்று மேக்கப் போட்டுகொண்டு வந்து நின்ற போது, ‘நீ சாதாரனமாவே நல்லாயிருப்பியே’ என்று சொன்ன‌ இவர்களின் விருப்பப்படி ப்யூட்டி பார்லர் போகாமலே திருமணத்திற்காக‌ நானே என்னை அலங்கரித்துக்கொண்ட போது ‘ஆங் இதுதான் எங்க அக்கா’ என சொல்லி என்னை மகிழ்வித்த தம்பிகள், கஸின்கள்………

நட்பின் உரிமையில் உனக்கு இதுதான் எடுப்பா இருக்கு, இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இல்ல, இந்த செருப்புதான் உன் காலுக்கு அழகா இருக்கு என சொல்வதில் ஆரம்பித்து, புரியும் செயல்கள் அனைத்தையும் உடன் இருந்து ரசித்து, இவர்கள் இத்தனை கூர்மையாக கவனிப்பார்களா, இவ்வளவு ரசனைமிக்கவர்களா ஆண்கள் என உணர்த்திய எனது கல்லூரி நண்பர்கள்……

என்னை ரசித்து பின் என் சின்ன சின்ன செயல்களையும் ரசித்து, இந்த பிறவியை ரசித்து வாழ்ந்திட இறைவன் எனக்களித்த வரமாக நான் நினைக்கும் என்னவர்……

இவர்களை தொடர்ந்து இன்று நான் சந்தித்து வரும் இனைய நண்பர்கள்.... இவர்களை பற்றி என்ன சொல்வது!!! நான் வரைந்த சித்திர பெண்ணழகை ரசித்து வர்ணித்து இவர்கள் எழுதிய கவிதைகள் படியுங்கள், உங்களுக்கே புரியும்... ஆண்கள் எவ்வளவு ரசனை மிக்கவர்கள் என்று. ஓவிய பெண்ணிற்கே கவிதையால் உயிர் கொடுக்க‌ நினைக்கும் ஆண்கள் இவர்கள். இப்பொழுது சொல்லுங்கள் தோழிகளே, ரசனை என்பது நிச்சயம் ஆண்பாலாகத்தானே இருக்கமுடியும்!!!



துப்பட்டா தேவதை





தென்றல் காற்றில்
பறக்கும் பார்வையை
வீசி செல்லும்
யார் இந்த
தேவதை
துப்பட்டா
தாரிகை !!!
                 …சிவா

துப்பட்டா என்னும்
என் தேவதையின் சிறகுகள்
பறக்கத்தானே செய்யும்..
                        …ப்ரியமுடன் வசந்த்


துப்பட்டாவில் படபடக்குதென் உசிரு
உன் பார்வை பட்டு(ப்) புள்ளியானேன்
கட்டிக் கொள்ளு இல்லைக் கண்ணை மூடு! :)
                                                                 …பாலன்


தேவதைக்கு இறகு இருக்குமாம் - பறக்க
ஆனால் பார்தவர்கள் யாரும் இல்லை
இன்று
உன் வண்டியில் நீ வரும் போது
காற்றில் பறந்த உன் துப்பட்டா - என்
கண்ணுக்கு தெரிந்தது அது இறகாக
                                                            …புதுவை சிவா

 
ராத்திரி வானின் ஒரு துண்டை
ரகசியமாய் திருடிவந்து
துப்பட்டா செய்திருக்கிறாய் காற்றில்
துடித்து பகல் வானத்திடம்
ஒழுங்கு காட்டுகிறது உன் துப்பட்டா...
                                                                     …சீமான்கனி


சுருண்டு நெளிந்து நீண்டு விழும்
கூந்தல் அருவியில்
சிக்கிக் கொள்ளும் ஒரிதழாவாவது
மாறேனோ?
                                      …பாலாஜிசரவணா


பாவையின் பார்வையிலே
பொய் கோபம் தெரியுதடி
கோவலன் நானிலையோ
கோபிக்க மாட்டாயோ
                                  …தினேஷ்குமார்

குளிர் நிறை கண்கள்
மடல் விசுறும் போதும்

தேன் இனிக்கும் உதட்டில்-தீந்
தமிழ் நழுவும் போதும்
காணமுடியா இடை
தாளமிடும் போதும்

காற்றிலே சேலை
வானவில்லான போதும்

நான் செத்து செத்து பிழைக்கிறேன்
உனை தொட்டுவிட துடிக்கிறேன்
                                                              …யாதவன்

 
ஒ பெண்ணே எனக்கு மட்டும்
உயிர் கொடுக்கும் சக்தியிருந்தால்
நொடியில் உன்னை என்னவளாக
மாற்றியிருப்பேன் .காலந்தோறும்
கவிபாடியிருப்பேன் இப்படி ஒற்றை
கவியில் புலம்ப வைத்து விட்டாயே..!!
                                                                       …ஜெய்லானி

Thursday, September 23, 2010

அழகு என்பது நிச்சயம் பெண்பால்தான்!!!

« அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா
ஏஹே... கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா »

"ஷாஜகான்" படத்தில் "மின்னலை பிடித்து மின்னலை பிடித்து" பாடலில் வரும் வரிகள் இவை. இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எவ்வளவு அழகாக பெண்னை ரசித்து எழுதப்பட்டு இருக்கிறதே என்று நினைத்துக்கொள்வேன். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் அழகுதான். ஒரு பெண்ணாக பெண்களை வரையும் போது இந்த பாடல் வரிகள்தான் நினைவில் வரும். ஏனோ என்னையும் அறியாமல் பெண்களை வரையும் போது மட்டும் இந்த பாடலை முனுமுனுத்தபடி வரைகிறேன்.









மேலே உள்ள படங்கள் அனைத்தும் நம் தமிழ் வாரப்பத்திரிக்கைகளை பார்த்து வரைந்தது. நான் வரைபவைகளை ரசித்து தொடர்ந்து பின்னூட்டமிடும் (ஆண்)நண்பர்கள் வழக்கம் போல் நன்றாக வரைந்து இருக்கிறீர்கள் என சொல்லாமல் இந்த சித்திரப் பெண்ணழகை பற்றி 'கனவு கன்னிகையோ.... காதல் தேவதையோ....' என எப்படி தோன்றினாலும் கவிதையாக எழுதிவிடுங்கள். காரணம் அழகு என்பது பெண்பால் என்றால், ரசனை என்பது நிச்சயம் ஆண்பாலாகத்தான் இருக்க முடியும்!

Tuesday, September 14, 2010

சொர்க பூமி!!!

             கோடை விடுமுறை என்றாலே பெரும்பாலான மக்கள் தேடி வருமிடம் கடல்களாகத்தான் இருக்கும். பூமியின் மேற்பரப்பில் மூன்று மடங்கு தண்ணீரால் அமையப்பெற்றுள்ளது இப்படி நாம் அனைவரும் அனுபவிக்கத்தானோ என தோன்றியது கடற்கரையில் குவிந்திருந்த‌ கூட்டத்தை காண்கின்ற போது. அதிலும் நாங்கள் வசிக்கும் பகுதி மிகசிறந்த சுற்றுலா தளம் என்பதற்கு அடையாளமே இந்த கடல்கள்தான்.

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் வெளி நாட்டினருக்கு நன்கு தெரிந்த Saint Tropez எனும் ஊரும் அங்குள்ள Pampolonne Beech ம்தான். சொந்த கப்பலகளில் வந்திறங்கும் வி.ஐ.பிகளை வித விதமாக புகைப்படம் எடுத்து லட்சக்கணக்கில் காசு பார்த்திட விலை உயர்ந்த கேமராக்களுடன் காத்திருக்கும் பாப்பராஸிகள்(Paparazzi) ஒரு புறமும் கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டு இருக்கும் கப்பல்களை காண்பதற்காகவே கூட்டம் கூட்டமாக காத்திருக்கும் மக்கள் இன்னொரு புறமும் என்று கடந்த‌ இரண்டு மாதமும் ஊரே விழாகோலம் கொண்டிருந்தது. சாதாரண மக்களில் இருந்து வி.ஐ.பிகள் வரை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் கடல் மகத்தானதுதான் !!!


என்னை சுற்றி சூழ்ந்துள்ள கட‌லலைகளின் தாலாட்டிலே எப்பொழுதும் நான் வாழ்ந்துக்கொண்டிருப்பதாக தோன்றும். தவழ்ந்து வரும் கடலலைகளில் மன‌ம் நனைய சலிக்க சலிக்க அதன் அழகினை ரசித்துவிட்டேன். ஆனாலும் மனம் மீண்டும் மீண்டும் தண்ணீரை நோக்கியே செல்கிறது. கோடை விடுமுறையின் கடைசி நாட்களில் அழகான சொர்க பூமிக்கு பயணமானோம்.

நகரத்து இரைச்சலும், செல்போல் மணியும் அலுத்து போகிற போது இப்படி ஏதாவது அமைதியான இடங்களுக்கு சென்று வருவது வழக்கம். எங்கள் வீட்டில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள சின்னஞ்சிறிய‌ ஊர் அது. கார் பார்க்கிங்கில் இருந்து 2கிமீ நடந்து செல்ல வேண்டும். நடைப்பாதையின் இருபுறமும் அடர்த்தியான மரங்கள் மெல்லிய காற்றுடன் வரவேற்கிறது. கொஞ்சம் கூட மாசு படியாத சுத்தமான காற்றினை சுவாசிப்பதை உள்ளே நடக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலே உணர முடிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சுற்றிலும் பசுமை கண்களுக்கு விருந்தாக அமைந்தது.


நகரத்து ஆரவாரமற்ற அப்பகுதியில் தூரத்தில் இருந்து எங்கோ நீர் வீழ்ச்சியின் மெல்லிய ஓசையை மட்டுமே கேட்க முடிந்தது. அதை நெருங்க நெருங்க கொட்டும் நீரின் சத்தமும் அதிகமாக‌ நம்மை நனைக்கும் சாரலை நன்றாக உணர முடிந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஏதோ மலைகளின் நடுவில் வெள்ளை நிறத்தில் போடப்பட்டு இருந்த ஒரு கோடு போல தெரிந்தது.



சரியான பாதை அமைக்கப்படாததால் நடப்பதற்கு சற்று சிரமமாக இருந்தது. ஆனாலும் தூரத்தில் இருந்து வந்த அருவியின் சத்தம் ஆவலை தூண்டி நடையில் வேகத்தைக் கொடுத்தது. நாங்கள் சென்ற பாதை மலையடிவாரத்தில் அழகாக ஓடிக்கொண்டு இருந்த நதியிடம் கொண்டு சேர்த்தது. சுற்றிலும் பசுமை போர்த்திக்கொண்டு இருந்ததால் தண்ணீரின் நிறமும் பச்சையாகவே காட்சியளித்தது.





அருவியினை அருகில் சென்று பார்க்கலாம், தண்ணீரில் நனைந்துவிட்டு வரலாம் என ஆவலுடன் அதை நெருங்கும் பாதையில் நடந்து சென்றோம். ஆனால் அங்கிருந்த எச்சரிக்கை பலகையை பார்த்தவுடன் பெரிய ஏமாற்றமாக இருந்தது. மலை பாறைகள் சரிவதாலும் அதனால் சிறு சிறு கற்கள் கீழே விழுவதாலும் அங்கே சரியான பாதை அமைக்க வேலை நடந்துக்கொண்டிருப்பதால் தற்காலிகமாக அத‌ன் வழியை தடைசெய்து கம்பிகளை கொண்டு மூடி இருந்தார்கள்.

நாமெல்லாம் என்னைக்கு விதிகளை கடைப்பிடித்து இருக்கிறோம் என்பதை போல ஒரு சிலர் அந்த கம்பிகளை ஒரு ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு அந்த பாதையில் செல்வதை பார்த்தோம். அன்று விடுமுறை நாள் என்பதால் வேலையாட்களும் இல்லை.


‘இவ்வள‌வு தூரம் வந்து அருவியின் அருகில் சென்று பார்க்காமல் போவதா’ என என்னவர் என்னை அந்த தடை செய்யப்பட்ட பகுதிக்கு அழைத்தார். ‘இல்லை ஆபத்து அதிகம் இருப்பதால்தான் அந்த பாதையில் செல்ல தடை செய்திருக்கிறார்கள். அதை மீறுவது பாதுகாப்பானது அல்ல, நாம் இன்னொரு நாள் வரலாம்’ என மறுத்துவிட்டேன். என்னை போல அந்த பாதையில் செல்ல விரும்பாமல் ஒரு பெண் தன் குழந்தையுடன் எச்சரிக்கை பலகையின் அருகில் நின்றிருந்தார். அந்த பெண்ணின் கணவரும் மகனும் மட்டும் அந்த பாதையில் நுழைந்திருக்க வேண்டும். அங்கேயிருந்து அச்சிறுவன் அவன் அம்மாவிற்கு "இந்த பகுதியில் எந்த ஆபத்தும் இல்லை. அதனால் பயம் வேண்டாம், தைரியமா வாங்க. அருவியினை அருகில் பார்க்க அழகா இருக்கு" என அழைப்பு விடுத்தான். அப்பொழுதுதான் அந்த பெண்னை கடந்து சென்றுக் கொண்டிருந்த எங்களுக்கு அச்சிறுவனின் வார்த்தைகள் காதில் விழ தானாகவே என் கால்கள் நின்றது. ஒரு நிமிடம் பக்கம் இருந்த என்னவரை ‘நாமும் போகலாமா’ என்பதை போல பார்க்க, அவரும் என் பார்வையின் அர்த்தம் புரிந்தவராய், அதற்காகவே காத்திருந்தவராய் என் கையை பிடித்துக்கொள்ள, மீண்டும் வந்த வழியே திரும்பி, அப்பகுதிக்குள் நுழைந்து, கரடு முரடான வழியில் ந‌டந்துச்சென்றோம்.

முன்னேறி செல்ல செல்ல பன்னீர் தெளித்து வரவேற்பதை போல் இருந்தது மேலே பட்ட சாரல். மிதமான வெயில், மலைகளில் இருந்து கொட்டும் தண்ணீர், அதன் மெல்லிய‌ சத்தம், நனைக்கும் சாரல்...... இப்படி அதன் இனிமையை உணர்கிற போது மனதில் ஏற்பட்ட ரம்யமான உணர்வுகளை எப்படி வார்த்தைகளில் சொல்வது! அது ஒரு சொர்கபூமி என்றுதான் சொல்ல தோன்றுகிறது. சொர்கமாய் தெரிந்த அந்த இடத்தின் பெயர் இதுதான்…Sillan la cascade !

அருவியை நெருங்கியும் இதற்கு மேல் எச்சரிக்கையை மீறுவது தவ‌று என்பதால் அன்று அங்கு யாருமே தண்ணீரில் இறங்கி குளிக்க முன் வரவில்லை. மாறாக முழுக்க முழுக்க கண்களுக்கு விருந்தளித்த காட்சியினை அனுபவித்து திரும்பினர்.




எதையும் அமைதியாகவே எதிர் நோக்கும் என்னை போலவே அங்கு ஒரு பறவை அமைதியாக தனிமைமையில் யார் வரவையோ எதிர்ப்பார்த்து காத்திருந்தது.



இத்தனை ரம்யமான தருணங்களை, தண்ணீரின் இனிமையினை மனிதர்களாகிய நம்மால் மட்டும்தான் உணரமுடியமா இல்லை இல்லை அனைத்து உயிரினங்களுக்குமே பொதுவானதுதான் என தோன்றியது அந்த பறவையினை பார்த்தபோது.

 "நீரின்றி அமையாது உலகு"!!!!!



Wednesday, September 1, 2010

பிரியமானவர்களுக்கு.....

           ன் மனசு நிறைஞ்சிருக்கு, மனசுல பட்டதை சொன்னேன், மனசுக்குள்ளேயே பேசிக்கிட்டேன், மனசே சரியில்ல..... இப்படி நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்றுக்கு 'மனசு' என பெயரிட்டு நாமும் அதையே முன்னிறுத்தி பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். என் மனதை நான் அறிந்துக்கொள்ளும் முயற்சியாகவே "என் மனதில் இருந்து"என பெயரிட்டு இந்த வலைப்பக்கத்தை தொடங்கி இதோ ஒரு வருடம் ஆகிவிட்டது.


தற்செயலாகதான் எழுத ஆரம்பித்தேன். அதுவரை என் டயரியில் மட்டுமே எழுதிவைத்து வந்த கவிதைகளில் சிலவற்றை பதிவிட ஆரம்பித்து பின் என்னை சுற்றி நிகழ்பவைகளையும் எனக்குள் நிகழ்பவைகளையும் எழுதி வருகிறேன். பெரும்பாலும் அந்தந்த நேர உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே என் பதிவுகள் இருப்பதாக உணர்கிறேன். நான் காண்கின்ற உணர்கின்ற  அனைத்தும் எனக்குள் ஏற்படுத்தும் ஆழமான பார்வையை எழுதிட விரும்பினேன். மனதிற்குள் சிக்கி தவிக்கும் உணர்வுகளை கவிதைகளிலாவது கொட்டி விட வேண்டுமென நினைக்கிறேன்! ஆனால் கவிதைகளில் கூட வெளிப்படுத்த முடியாத நேரங்களில் ஓவியங்களின்  மூலம் எனது உணர்வுகள் வண்ணங்களாக வெளிப்படும் போது ஏதோ ஒரு வித நிறைவு ஏற்படுகிறது.ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று என்னை சலனப்படுத்தும் போது இங்கே அவை எழுத்துக்களாக வடிவம் பெறுகிறது.

இதன் மூலம் அற்புதமான நட்புகள் கிடைத்திருக்கிறது. கிடைத்திருக்கும் தோழமைதான் என்னை பரவசப்படுத்தி மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது.

என் வலைப்பக்கத்தை பார்வையிடும் அனைத்து உள்ளங்களிலும், தொடர்ந்து பதிவுகளை படித்து எழுதும் பின்னூட்டங்களிலும் உங்களுக்கும் எனக்குமான‌ பிரியத்தை உணர்கிறேன். ஒரு வருடம் ஆகிய நிலையில் உங்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.

எழுத்துக்களாலே நாம் இணைந்திருக்கிறோம். இன்று அதே எழுத்துக்கள் மூலமாகவே என் பிரியமானவர்களுக்கு நன்றிகளை சமர்ப்பிகிறேன்.