அழகு:
அழகு என்றால் தீபா
தீபா என்றால் அழகு
இப்படிதான் சொல்ல தோன்றுகிறது…அந்த அழகிய பெண்னைப் பற்றி நினைக்கும்போது. தீபா ஒரு வட நாட்டுப்பெண். பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரியில் B.Pharm.படிக்கவந்தவர்.
அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். சில வட நாட்டு பெண்கள், கல்லூரியில் ஹாஸ்டல் வசதி இல்லாததால் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்கள். இவர்களில் பளிச்சென்று தெரிந்தவர்தான் தீபா. வெறும் அழகி என்று சொல்ல முடியாது...தேவதை!
தீபா அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். எங்கள் அனைவருடனும் மிக friendlyயாக பழகுவார். கல்லூரி கலை நிகழ்ச்சிகளின் போது தீபா தன்னை அலங்கரித்து செல்வதை சொல்ல வார்த்தைகள் போதாது. (அவர் மட்டுமே தாவணி அணிந்து தலையில் பூவைத்து செல்வார்). அச்சமயங்களில் என் அம்மா தீபாவை அழைத்து கண்ணு பட்டு விடும் என்று சுற்றி போடுவார்கள்.
அழகை தன் மேனியில் மட்டுமல்லாமல் மனதிலும் கொண்ட தீபாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவளை முதல் முறை பார்த்துபோது இதுவரை இப்படி ஒரு அழகான பெண்ணை பார்த்ததில்லையே என்றும் இனி அப்படி ஒரு பெண்ணை பார்க்க போவதும் இல்லை என்றுதான் நினைத்தேன். உண்மைதான்… இன்றுவரை அவளைவிட அழகாக ஒருத்தியை பார்த்ததும் இல்லை இவ்வுலகில் இருப்பதாக தோன்றவும் இல்லை. இன்று உலகில் எந்த மூலையில இருக்கின்றாரோ தெரியாது... ஆனாலும் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
(வருத்துகிறேன் இப்படி பின்னாளில் அவரைப் பற்றி எழுதுவேன் என்று தெரிந்திருந்தால் ஒரு போட்டோ ஆவது வாங்கி வைத்திருப்பேன். நான் சொல்வது எவ்வளவு உண்மை என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும்)
மஸிக்கா
உறவு :
உறவுக்கார பெண் அல்ல என் எதிர் வீட்டு பெண். அல்ஜேரியா நாட்டை சேர்ந்த முஸ்லிம் பெண். சிறு வயதிலே பிரான்ஸுக்கு வந்தவர். என்னை விட வயதில் மூத்தவர். என் கணவரின் மூலமாகத்தான் இவரின் நட்பு கிடைத்தது. சில உறவுகளிடம் இருந்து பாசம் கிடைத்தாலும் அதில் எப்பொழுதும் நட்பு இருந்ததில்லை. ஆனால் மஸிக்காவின் நட்பில் நான் உறவினை கண்டேன். அவரின் பாசத்தை கண்டு பிரமித்துபோனேன். இங்கு வந்த புதிதில் என்னவர் இரவில் வேலைக்கு சென்றுவிட்ட நாட்களில் பயமின்றி இருந்தேன் என்றால் அவங்களால்தான். என் வாழ்க்கையில் நான் சந்தோஷத்தை கொண்டாடிய போது என்னை கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தமிட்டும், மிகப் பெரிய இழப்பினை சந்தித்தபோது கட்டியனைத்து கண்ணீரும் விட்டவர். என் சந்தோஷத் தருணங்களில் அவரின் உண்மையான மிகிழ்ச்சியும்,சோகத்தில் கண்களில் கண்ணீரையும் பார்த்து இருக்கிறேன். இவருடனான உறவு இன்றும் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது.
கிறிஸ்தியான
ஆர்டிஸ்ட் :
கிறிஸ்தியான் ஒரு ஆர்டிஸ்ட். 60 வயதை தான்டிய வயதிலும் அழகான ஓவியங்களை வரைபவர். என்னை இவரிடம் அறிமுகப்படுத்தி நான் வரைந்த படங்களையும் காட்டினார் என்னவர். என் ஓவியங்களை பார்த்து பாராட்டிய கிறிஸ்தியான் மறு நாளே என்னை ஒரு ஓவியப் பள்ளிக்கு அழைத்து சென்று அங்கிருந்தவர்களிடம் என்னை ஒரு ஆர்டிஸ்ட் என்றே அறிமுக படுத்தினார். முதல்முறை என்னையும் ஒரு ஆர்டிஸ்டாக பார்த்தவர் அவர்தான். அவருக்கு தெரிந்த ஒரு இடத்தில் என் ஓவிய கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்தவர். ஹாபியாக வரைந்துக் கொண்டு இருந்த என்னை கண்காட்சி செய்ய வைத்து முதல் முறையாக பணம் செலுத்தி என் படங்களையும் மற்றவர்கள் வாங்கும் படி செய்தவர். என் கலை பயனத்தில், என் முதல் படுக்கட்டாக இருந்தவர். அதன் தொடர்ச்சியாக என் பெயர் உள்ளூர் செய்தி தாள்களில் வர காரணமாக இருந்தவர்.
கரோல்
அரசு அதிகாரி :
அரசு அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர். எனக்கு இவருக்குமான அறிமுகம் officialலாகத்தான் இருந்தது. சிரித்த முகத்துடன் எளிமையாக பேசிய இவரை பார்ததுமே பிடித்து விட்டது. இவர் அரசு பதிவியில் இருந்துகொண்டே யுனிவர்சிட்டியிலும் ஆசிரியராக பணி புரிகிறார். தனியாக ரிசேர்ச்சில் ஈடுபட்டு நிறைய புத்தகங்கள் எழுதுகிறார். இதன் நிமித்தமாக அடிக்கடி வெளி நாடுகளுக்கு சென்று வருபவர்(நம் இந்திய நாட்டிற்கு கூட வந்து இருக்கிறாராம்).
திறமைகள் இருந்தும் வெளி நாட்டினரை சற்று ஏளனமாக பார்க்கும் சில பிரெஞ்சுகாரர்களின் மத்தியில் இவர் மட்டும் வித்தியாசமானவர். சந்தித்த இரண்டாம் முறையே என் திறமைகளை மதித்து அவர் எழுதிய The adolescent pshycology என்ற ஆங்கில பிரெஞ்சு புத்தகத்தில் சில பக்கங்களை மொழி பெயர்ப்பு பணி செய்ய வாய்ப்பு அளித்தவர். சிறிய வயதிலேயே இத்தனை திறமைகள் இருந்தும் கொஞ்சம் கூட கர்வமோ தலை கணமோ இல்லாதவர் கரோல். எவ்வளவு உயர்ந்த நிலையை நாம் அடைந்தாலும் இவரை போலதான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.
லிதி
நட்பு :
Blog என்ற ஒன்று இருப்பதை எனக்கு அறிமுகப்படுத்திய தோழி. வெளி உலக தொடர்பு இல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்த சமயம் அது. வரைவதில் முற்றிலும் ஆர்வமின்றி இருந்தேன். அப்பொழுதுதான் லிதி நீ ஏன் ஒரு பிளாக் கிரியேட் பண்ணக்கூடாது? என்று கேட்டு அவளே ஒரு French blog ஒன்றை ஆரம்பித்து கொடுத்தாள். எனது தனிமையை கிரியேட்டிவாக மாற்றியது அவள்தான். ஆரம்பித்த சில நாட்களிலேயே நிறைய கற்றுக்கொண்டு அவளுக்கு தெரியாத சில வற்றை நான் சொல்லி கொடுத்த போது கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் என்னை மனதாரப் பாராட்டியவள். அவள் ஆரம்பித்து வைத்ததின் தொடர்ச்சியாகதான் இந்த blogகும். இதன்மூலமாக எனக்கு கிடைத்த நட்பு வட்டத்திற்கு முன்னோடியாக இருந்தது இவளின் நட்புதான்.
ஷான்தால்
டீச்சர் :
+1ல் என் Maths Miss. எப்பொழுதும் அவரிடம் ஒரு ஸ்டைல் இருக்கும். பேசுவதில், நடப்பதில், பாடம் எடுப்பதில் என்று எல்லாமே அழகாக இருக்கும். எனக்கு இவரிடம் பிடித்ததே சாக்பீஸை எடுத்துக்கொண்டு பிளாக்போர்டில் எழுத ஆரம்பிக்கு அந்த நிமிடங்கள்தான். ஸ்டெப் பை ஸ்டெப்பாக கணக்குகளை விளக்கிக் கொண்டே அவர் எழுதுவதை பார்த்தால் சரியாக படிக்காத மாணவிக்கூட புரிந்துக்கொள்வாள். அத்தனை தெளிவாக அடித்தல் திருத்தல் இல்லாமல் neatஆக எழுதுவார்.
எனது படிப்பு முடிந்து ஆசிரியர் வேலைக்கு சேர்ந்த ஆரம்ப நாட்களில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்தபடியே போர்டில் எழுதிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ரவுண்ட்ஸ் வந்த பிரின்ஸ்பால் வெளியில் இருந்தபடியே கவணித்து, பின் வகுப்பில் நுழைந்தவர் உங்க கை எழுத்து மிக அழகாக இருக்கிறது. போர்டில் நீங்க எழுதுவது மிக தெளிவாக நீட்டாக இருக்கிறது…. என்று சொல்லி மாணவர்களிடம் நீங்களும் உங்க மிஸ் மாதிரி அழகா எழுத கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார். சந்தோஷமுடன் அவருக்கு நன்றி சொல்லிய அடுத்த நிமிடம் எனக்கு என் மிஸ்ஸின் முகம் நினைவில் வந்து போனது. மனதிற்குள்ளே அவருக்கும் நன்றி சொல்லி கொண்டேன்.
கஸ்தூரி
காதல் :
என் கல்லூரி தோழியான இவள் பார்ப்பதற்கு நடிகை மீரா ஜாஸ்மினை போல் மிக அழகாக இருப்பாள். சும்மா பொழுது போக்கிற்காக காதல், பெற்றவர்களை விட்டு ஓடிப்போய் வாழும் காதல், மெச்சுயூரிட்டி வந்தபின் கழட்டிவிட்ட காதல்.... என்று பள்ளி… கல்லூரி காலத்தில் என்னை சுற்றி நிகழ்ந்த சில காதல் கதைகளில், இவளால் மட்டுமே காதல் மரியாதைக்குரியது என்பதனை உணர்ந்தேன்.
விவரம் அறியாத வயதில் இருந்தே குடும்ப நண்பர் ஒருவருடன் நட்பாகி,பின் அவர்கள் வளர வளர காதலும் மலர்ந்துள்ளது. பேசும்போது எப்போதும் அவரின் பேரைச் சொல்ல மாட்டாள். அவர் சொன்னார், அவர் வந்தார் என்றுதான் சொல்லுவாள். அவள் எவ்வளவு சென்சட்டிவ் என்றால் தோழிகள் நாங்கள் யாரும் அவரை பெயர் சொல்லி பேசக்கூடாது, என்றாவது மறந்துபோய் ரிஷி எப்படி இருக்கார் என்று கேட்டு விட்டால் கோபம் கொண்டு எங்களை திட்டிவிடுவாள். (இப்போது அவரின் பெயரை சொன்னதற்காக மனதாற அவளிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்) என்ன இவ இப்படி இருக்கா என்று நினைத்துக்கொண்டாலும் அதில் மறைந்திருக்கும் அவளின் உண்மையான நேசத்தை நினைத்து சந்தோஷப் பட்டுக்கொள்வேன். இன்று காதல் கணவன், குழந்தை என்று அழகிய குடும்பம் அவளுடையது.
Clair Chazal
செய்தி வாசிப்பாளர் :
பிரான்ஸ் முன்னனி தொலைக்காட்சியில் (TF1) செய்தி வாசிப்பாளராக இருப்பவர். 50 வயதிலும் பார்ப்பவர்களை கவர்ந்து விடும் வகையில் இவரின் தோற்றமும் செய்தி வாசிக்கும் அழகும் இவரின் சிறப்பு. செய்தி வாசிப்பவர்களுக்கு குரல் வளம் எத்தனை அவசியமோ அதே போல் தோற்றமும், சரியான வார்த்தை உச்சரிப்பும் அவசியம். சரியான முகபாவங்களும் தேவை. அது நேச்சுரலாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
நம் தமிழ் செய்தி வாசிப்பவர்களை பார்க்கும்போது ஏதோ ஒரு விஷேத்திற்கு கலந்துக்கொள்ள வந்தவர்களை போல பட்டு புடவையும், தலை நிறைய பூவும், நகைகள் என்று பார்வையாளர்களை சற்று உறுத்துவது போல் உள்ளதாக தோன்றும். அவர்கள் பேசுவது இயல்பாக இல்லாததைபோலவும் ரொம்ப கண்டிப்பான தோரணையில் சொல்லுவதாக தோன்றும். அந்த வகையில் Clair chazalலின் இயல்பான செய்தி வாசிக்கும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
தாமரை
கவிஞர் :
வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
என்ற வரிகளை கேட்டபோதே யாரிவர் என்று தேட வைத்தவர். அதன் பிறகு எத்தனையோ பாடல்களை எழுதி, சமீபத்தில் வந்த விண்ணைதாண்டி வருவாயா வரை பலபேரின் இதயத்தை கொள்ளை கொணடவர்.
நம்மை புதுபிப்பதில் அதிக பங்கு வகிப்பது இசை. அப்படிபட்ட இசைக்கு தகுந்த கவிதை வரிகள் அமைந்து விட்டால்... கேட்கும் போது சுகம்தானே! எப்பொழுதும் அழகிய பாடல் வரிகள் நம் மனதின் மெல்லிய உணர்வுகளை மாற்றி அமைக்க கூடிய சக்தி படைத்தவை. அப்படி நம் உணர்வுகளை புதுபித்துக்கொள்ள சிறந்த கவிதைகளை தரும் தாமரை அவர்களை என்ன சொல்லி வாழ்த்துவது!
மோனலிசா
மோனலிசா.... Leonardo Da Vinci யின் மாஸ்டர் பீஸ் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இட்டாலியை சேர்ந்த டாவின்சியின் ஓவியம் பல நூற்றாண்டுகளாக பிரெஞ்சு அரசின் Royal collectionsன் கீழ் உள்ளது.
சிறுவயது முதலே இவரை பற்றி படங்களில் பார்த்தபோதோ பத்திரிக்கைகளில் படித்தபோதோ ஏதோ ஒரு மர்மமான பெண்ணாக தோன்றியது. அழகான பெண்களை எப்போதும் மோனலிசாவுடன் ஒப்பிட்டு சொல்லும்போது…. ஏன், யாரிந்த மோனலிசா ? என்று பல கேள்விகள் எழுந்தது. அந்த மாடல் பெண் யார்? அவரின் பார்வையிலும் புன்னகையிலும் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?
அந்த மர்ம பெண்ணின் நிஜப்பெயர் Lisa del Giocondo. பின் ஏன் அவரின் Portraitக்கு மோன லிசா என்ற பெயர் வந்தது? இட்டாலி மொழியில் Mona என்றால் மேம்/மேடம் என்று ஆங்கிலத்தில் மரியாதையுடன் அழைப்பதைப் போன்ற சொல் என்பதால் மோனாவுடன் அவரின் உண்மையான பெயரும் சேர்ந்து மோன லிசாவானது.
இன்றுவரை அவரைப்பற்றி நிறைய மர்மங்கள் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த படத்தை நன்றாக உற்று பார்த்தால் தெரியும்… அப்பெண்ணின் ஓவியத்தில் புருவங்களோ கண் இமைகளோ இன்றி வரையப்பட்டு இருக்கும. வரைந்து முடிக்க நான்கு வருடம் ஆன நிலையில், இவரின் சோகம் கலந்த புன்னகையில் மறைந்திருக்கும் மர்மம் என்னவோ? தன் குழந்தையின் இழப்பால், தன் கணவனின் குடிப் பழக்கத்தினால், etc.... என்று இவரை பற்றிய studies சொல்கிறது.
500 வருடங்கள் கடந்தப்பின்னும் ஓவியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மோன லிசாவை போல் ஒரு பெண் இனி வரும் காலங்களில் கிடைப்பாரா?
***********
இவர்களுடன்..... இதுவரை என் வாழ்வில் சந்தித்த இனி சந்திக்க போகும் பெண்கள் அனைவருமே எனக்கு பிடித்தவர்கள். இந்த தொடர் பதிவிற்கு அழைத்த நண்பர் Raghuக்கு என் நன்றிகள். வாங்க Joe, Padma, appavi thangamani இப்பதிவை தொடர்ந்திடுங்கள்.
இதோ அதற்கான விதி முறைகள் !
1. உறவினர்களாக இருக்கக்கூடாது.
2. வரிசை முக்கியமில்லை.
3. ஒரே துறையில், பிடித்த பல பெண்கள் இருந்தாலும் ஒருவரைத்தான் குறிப்பிடவேண்டும்.
இதோ அதற்கான விதி முறைகள் !
1. உறவினர்களாக இருக்கக்கூடாது.
2. வரிசை முக்கியமில்லை.
3. ஒரே துறையில், பிடித்த பல பெண்கள் இருந்தாலும் ஒருவரைத்தான் குறிப்பிடவேண்டும்.