சேமித்து வைக்கிறேன்...
காலங்கள் உருண்டோடியும்
கரையாத நினைவுகளோடு
உணர்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள
உன் பார்வை ஒவ்வொன்றையும்!
கடந்து சென்ற காலங்களில்
கண்களினால் கவிதை
எழுதியவன் நீ!
உன் முதல் பார்வையிலே
முழுவதுமாக என்னை சரித்தாய்....
ஆழமான பார்வையில்
அன்பாய் பேசுவாய்
ஆசையோடு பார்த்து
என் வெட்கத்தை சுவைப்பாய்.
நிஜமான உன் நேசத்தால்
நித்திரை பறித்து
பார்வையாலே பாவை இவளிடம்
காதல் புரிவாய்!
நீ கண் அசைத்தால்
நான் மனம் சாய்கிறேன்
உன் பார்வை பட்டதும்
என் சுயம் மறக்கிறேன்.
கண்ணியமான உன் பார்வையால்
இவளில் காதல் பிறக்கும்
காதலான உன் பார்வையால்
என்னில் ஆசைகள் சுரக்கும்
அழுத்தமான பார்வை ஸ்பரிசத்தால்
என் பெண்மை தவிக்கும்...
உன் உயிரில் இணைந்திட துடிக்கும்!
உன் பார்வையின் இன்னும் பல
உண்மைகளை அறிய ... தொடர்ந்து
சேமித்து வைக்கிறேன்
....... உன் பார்வை ஒவ்வொன்றையும்!