Subscribe:

Pages

Monday, May 30, 2011

தி லேண்ட் ஆஃப் ரொமான்ஸ்...!


           காஸ்ட்லியாக ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் என்றால் சரியான இடம் பாரிஸ்தான். செல்ல காரண‌மாய் இருந்தது உறவினரின் திருமணத்திற்காக என்றாலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள முன் கூட்டியே விடுமுறை எடுத்துக்கொண்டோம். உறவினர்களின் அன்பு உபசரிப்பில் கொஞ்சம் வெயிட் போட்டும், வெயிலில் சுற்றியதால் கறுத்தும் சற்று இளைத்தும் பாரிஸில் பதினைந்து நாட்கள் நன்றாக சுற்றிவிட்டு திரும்பி இருக்கிறேன்.

ஆர்ப்பரிக்கும் மக்கள் கடல், வளைந்து நீளும் ரோடுகள், வானுயர்ந்த‌ கட்டிடங்கள், செதுக்கிவைத்த சிலைகள் என இயற்கையும் செயற்கையுமாய் விரிந்த காட்சிகள் எதையும் என் வழிப்பயணத்தில் ரசிக்க தவறவில்லை. தொலைவில் உள்ள பாரிஸுக்கு காரில் செல்வது கஷ்டமாக தெரிந்தாலும் என்னவரின் அழகான டிரைவிங்கும் மனதை வருடும் இனிமையான‌ பாடல்களையும் ரசித்தபடி சென்றது 860 கீலோ மீட்டரையும் வெறும் அறுபது கீலோ மீட்டராக்கி பயணத்தை இனிமையாக்கியது.

முதல் ஐந்து நாட்கள் திருமண வேலைகள், கொண்டாட்டங்கள் என கடந்துவிட, மீதி நாட்களை சரியாக ஒவ்வொரு நாளும் ஒரு சில இடங்களை காண‌ வேண்டும் என முடிவு செய்து அதன்படியே கண்டு ரசித்துவிட்டு வந்து இருக்கிறேன்.

உலக நாடுகளால் தி லேண்ட் ஆஃப் ரொமான்ஸ் என அழைக்கப்படும் பாரிஸ் ஐரோப்பிய நாட்டு மக்களையும் தாண்டி பல நாட்டினரை வசீகரிப்பதாகவே இருக்கிறது. பழமையும், புதுமையும் கலந்து பேரழகையெல்லாம் தன்னுள் வைத்திருக்கும் ஒரு அற்புத நகரம் !



உலக அதிசயங்களில் ஒன்றான‌ ஈஃபில் டவர் இங்கிருப்பதால் ஒவ்வொரு நாளும் அங்கே மக்கள் குவிந்திருப்பதை காணலாம். உச்சி வரை செல்ல படிகளும், 'கேபிள்கார்' எனும் லிஃப்டுகளும் உண்டு. இதற்கு தனித்தனியாக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மேலே ஏறியும் அல்லது கீழே தரையில் படுத்துக் கொண்டும் டவரை விதவிதமாக சுற்றுலாவினரின் புகைப்படங்கள் எடுக்கும் காட்சி அழகானதாக இருக்கிறது. முரட்டு கம்பிகளை கொண்டே மென்மையான பாரிஸின் அடையாளமாக திகழ்கிறது இந்த ஈஃபில் டவர்! நகரின் இடையே ஓடும் ஸீன் நதி டவருக்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.
மேலும் படங்கள்.....



இதை அடுத்து மக்கள் சேரும் இன்னொரு இடம் L' Arc de Triomphe (Triumphal Arch). பிரெஞ்சு புரட்சி போரில் வீர மரணம் அடைந்தவர்களின் நினைவாக மாவீரன் நெப்போலியன் மன்னரால் கட்டப்பட்ட இந்த இடம் பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற monument ஆக‌ போற்றப்படுகிறது. நகரத்தின் முக்கியமான அடையாளமாக‌ இதை காணப்படுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை அங்கு ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை பார்க்கும் போது. அந்த சாலைக்கே உரிய‌ அழகால் பல முக்கிய நிகழ்வுகளும் இங்கே நடத்தப்படுகிறது. எக்ஸ்பென்சிவ் அவின்யு என்றால் அது இந்த வளைவை சுற்றியிருக்கும் பகுதிகள்தான். மேலும் படங்கள்.....

ஓடும் காரிலிருந்தபடியே என்னவர் எடுத்த பட‌ம் இது... எப்பொழுதும் பிஸியாக இருக்கும் சாலை இந்த படம் எடுக்கும் நேரத்தில் மட்டும் பக்கா க்ளியராக இருந்தது!


எப்பொழுதும் சந்தோஷமான காட்சிகளை கொண்ட இப்பகுதியில் இளவரசி டயானா உயிர் விட்ட இடத்தை நெருங்கும் போது மட்டும் மனது என்னவோ போலாகிவிடுகிறது.


சுற்றுலாவினர் விரும்பி செல்லும் வரலாற்று சிற‌ப்புமிக்க மற்றுமொரு இடங்கள் கிறிஸ்துவ‌ பேராலயங்கள் : Cathedral - our lady of Paris & Basilica Sacred Heart of paris ! பேராலயங்களின் உட்புற வெளிபுறத்தில் தென்படும் அழகு, கலை நயமிக்கதாய் உள்ளது. நெப்போலிய மன்னர் பிரான்ஸ் நாட்டு சக்கரவர்த்தியாக முடிச்சூட்டிக்கொண்டது அவர் லேடி ஆஃப் பாரிஸ் பேராலயத்தில்தான்.ஆனால் சத்தமான‌ பேச்சுகளும் கேமிராக்களின் பிளாஷும் சத்தமும் மாதவின் பேராலயத்தை வெறும் சுற்றுலா இடம்போல காட்டியது.


இதற்காகவே Sacred heart ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. அதனாலே ஆலயத்தின் உள்ளே செல்லும் போதே மனதில் அமைதி குடிக்கொள்கிறது. மற்ற ஆலயங்களைபோல் அல்லாமல் இந்த ஆலயத்திற்குள் மட்டும் அமைதியையும் அதன் தனித்தன்மையையும் பாதுகாத்து வருவதால் வெளிபுறத்தில் உள்ள‌ பார்கில் பொழுதை கழிக்கும் மக்களை காணமுடிகிறது. உயரமான பகுதியில் இப்பேராலயம் இருப்பதால் எப்படி ஈஃபில் டவரின் மேலிருந்து பாரிஸின் மொத்த அழகை காண முடிகிறதோ அதே போல் ஆலயத்தின் நுழைவு வாயிலில் இருந்து நகரத்தின் அழகை ரசிக்க முடிகிறது.


இந்த பஸிலிக்கா இருக்கும் பகுதியில் இன்னொரு சிறப்பும் உண்டு. ஆலயத்தை ஒட்டிய சாலைகளில் தெருவோர ஓவிய கலைஞர்களை பார்க்கலாம். நம்மை அமர்த்தி நிமிடங்களில் போர்ட்ரெய்ட் வரைந்துக்கொடுக்கிறார்கள்.
மேலும் படங்கள்.....

அடுத்து எனக்கு பிடித்த... மிகவும் ரசித்த லூவர் அருங்காட்சியகத்தைப்பற்றி சொல்ல வேண்டும். உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றான‌ இதைப்பற்றிய விவரங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

பார்க்க வேண்டிய இன்னொரு இடம் The Palace of Versailles நகரத்தின் மையப்பகுதியில் இருந்து சுமார் இருபது கிமீ தொலைவில் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரண்மனை. பல அடுக்குகளையும் அறைகளையும் கொண்டு பார்ப்பதற்கே மிக பிரமாண்டமாய் இருந்தது. அரச குடும்பத்தினருக்காக தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் உள்ளே அழகாக தெரிந்த ராயல் அலங்கரிப்புகள் அனைத்தும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. பார்ப்பவர்களை கவரும் முக்கியமான இடம் அங்குள்ள Hall of Mirrors... அத்தனை அழகாக ஜொலிக்கிறது! அரண்மனை உள்ளே செல்ல நுழைவுக்கட்டணம் என்றாலும் அதன் சுற்றிலும் அமைந்துள்ள மிக பெரிய பார்க்கிற்க்கு அனுமதி இலவசம் என்பதால் அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. பாதுக்காப்பாக பராமரிக்கப்பட்டு வரும் தோட்டங்களில் ஆங்காங்கே இருந்த சிலைகள் கூடுதல் அழகை சேர்க்கிறது.
படங்கள் உள்ளே.....


பாரிஸின் கட்டிடங்கள் தெருக்கள் எல்லாம் பழமையின் பெருமை பேசிக்கொண்டு புதுமையாக‌ ப‌ளிச்சிடுகிற‌து. க‌ட்டிட‌ங்க‌ளின் ப‌ழ‌மையை பாதுகாத்து உள்ளே ம‌ட்டும் புதுபித்த‌ பராம‌ரிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

பாரிஸின் சுற்றுலா தலங்களின் நுழைவுக்கட்டணங்களை விட அதிக பண‌ம் செலவாகும் இடம் என்றால் கார் பார்க்கிங்தான். அதே போல் இங்கு டிராபிக்கை கடந்து போக பொறுமை அவசியம். இதை சமாளிக்க முடியாமலே இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் வேலைக்கு சென்றுவர இருசக்கர‌ வாகனங்கள் அல்லது public transit பயன்படுத்துகிறார்கள்.

பாரிஸை சுற்றிப்பார்க்க சுற்றுலாவினர் விரும்பும் மாடி பஸ்!


அதேப்போல் ஈபில் டவரை சுற்றி உள்ள‌ பகுதியில் இருக்கும் ரெஸ்டாரண்டுகள் மிகவும் காஸ்ட்லியானது. விதவிதமாக ருசித்து சாப்பிடும் என்னவருடன் ஒரு நாள் அப்படி ஒரு பெரிய பிரெஞ்ச் ரெஸ்டாரண்டில் உணவருந்தினோம். இன்னொரு நாள் விலை மலிவாக உள்ள நம் தமிழ் ரெஸ்டாரண்டுக்கு சென்றோம். அங்கே தமிழ் நாட்டு உணவை ரசித்து சாப்பிடும் பிரெஞ்சுகாரர்கள் நிறைய பேரை பார்க்க முடிந்த‌து.

இந்தியர்களுக்காக ஒரு பகுதி... அங்கே தமிழ் பேசுபவர்களைதான் அதிகம் காணமுடிகிறது. காணும் இடங்களில் எல்லாம் 'சென்னை சில்க்ஸில்' தொடங்கி கடைகளின் பெயர்கள் எல்லாம் தமிழில்தான் இருக்கிறது. அங்குள்ள தமிழ் கிறிஸ்தவர்கள் சேர்ந்து தமிழிலேயே சிறப்பு ஆராதனைகள் ஆலய திருவிழாக்கள் என கொண்டாடி மகிழ்கிறார்கள். அதில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. சொந்தங்கள் தெரிந்தவர்கள் என அனைவரையும் கண்டு மகிழ்ந்தேன்.

பாரிஸிக்கு சென்று ஷாப்பிங் இல்லாமலா... நிறைய கடைகளை சுற்றி கைகளில் பைகளுடன் திரும்பினேன். பையில் யூரோ இருந்தா நிச்சயம் பாரிஸ் சொர்கம்தான்! நகரத்தின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் எல்லாம் மிக எக்ஸ்பென்சிவாக இருக்கிறது. அதனாலே கடைகள் எல்லாம் ராயலாக காட்சியளிக்கிறது. அதே வீதிகளில் கார் பிரியர்களை மகிழ்விக்கும் வண்ணம் அடுத்தடுத்து சில கார் ஷோரூம்கள் உள்ளது. கார் பிரியரான என்னவர் ஒவ்வொரு காரினையும் ஆர்வமாக ஆசையாக பார்க்க‌, நானும் சேர்ந்து ரசித்தேன்.

கார் தயாரிப்பில் ஐரோப்பியாவின் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரெஞ்சு பிராண்ட் Peugeot! மற்ற கார்களை காட்டிலும் அனைவரையும் கவர்ந்ததாக இது இருந்தது.


அமைதியான சிறிய ஊரில் இருந்து சென்ற எனக்கு பாரிஸின் வேகம் சில சமயங்களில் சோர்வைக் கொடுத்தாலும் இரவு ப‌கல் பாராமல் தன் அழகால் அனைவரையும் மகிழ்விக்கும் நகரம் என்னையும் உற்சாகப்படுத்தி மகிழ்வித்தது.

ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், சதா அங்குமிங்கும் அலைந்து திரியும் மக்கள் என தனக்கான காட்சியில் இருந்து சற்று மாறுப்பட்டுள்ள இந்த சாலையும் பாரிஸில்தான் உள்ளது...!!!


நான் பார்த்து இடங்களைப் பற்றிய சுற்றுலா அனுபவங்களை புகைப்படங்களுடன் உங்களுடன் பகிர்ந்துக் கொண்டதில் சந்தோஷம் என்றாலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொள்ள முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம். பாரிஸில் உள்ளவர்கள் திரைப்பட விழாவிற்காக‌ இங்கு வர நானோ விழா நடைபெற்ற பதினைந்து நாட்களும் பாரிஸில் இருந்துவிட்டேன். இம்முறையும் கேன்ஸ் க்ளிக்ஸ் மிஸ்ஸாயிடுச்சி நண்பர்களே!

Tuesday, May 3, 2011

உல்லாச உலகம்...!


         சிவந்த‌ப் பாறைகள்... பசுமையான தாவரம்... நீலக்கடல்... பொன்னிற மணற்பரப்பு என மொத்த அழகினையும் தன்னுள் கொண்டு திகழும் இப்பகுதியின் பெயர் La Corniche de l'Estérel.

எங்கள் மாவட்டத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் பொழுதுப்போக்கு இடமாக திகழ்கிறது இந்த கடற்கரை. சனி ஞாயிறுகளில் பரப்பரப்பாக காணப்படும் இப்பகுதி விடுமுறை நாட்களானால் திருவிழா கோலம் கொள்கிறது. பள்ளி ஆண்டு விடுமுறை தொடங்க இன்னும் இரண்டு மாதம் இருக்கும் நிலையில் சென்ற மாதம் விடப்பட்ட இரண்டு வார‌ ஈஸ்டர் விடுமுறையின் போதே இங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. ஓங்கி உயர்ந்திருக்கும் சிவந்த‌ மலை பாறைகள்... Mediterranean கடல்; நடுவே பயணிக்கும் சாலை என இந்த littoral zone க்கு La corniche d'or(The Golden Cornice) என்னும் சிறப்பு பெயரும் உண்டு. வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி கடலினையும் கடல் சார்ந்த பகுதிகளையும் பார்வையிட வசதியாக ஆங்காங்கே கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதேப்போல் கடலில் குளிப்பவர்களுக்காக சில பகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான பாதுக்காப்பற்ற பகுதிகளெல்லாம்  ஹெலிக்காப்டரில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.

சிவந்த பாறைகளில் மோதி சிதறித் தெறிக்கும் நீரின் அழகை காணும் பொழுது விழிக‌ள் இமைக்க மறுந்துபோய் விடுகிறது. இந்த அழகினை ரசிக்க ஆரம்பித்த பிறகு அதிலிருந்து பார்வையை திருப்ப‌ முடியாமல் மனம் அதிலே லயித்துவிடுகிறது; தங்கபோல் ஜொலிக்கும் மணல், வெண்பஞ்சு நுரைகளை அள்ளிவரும் அலைகள், பாறைகளை தொட்டு எழும்பும் நீரோசை, வட்டமிடும் பறவைகள், சிரிக்கும் பூக்கள், மிதமான வெயில், வருடும் காற்று, அனைத்தையும் மறந்து சந்தோஷத்துடன் குதுக்கலிக்கும் மக்கள், நிமிடத்திற்கு நிமிடம் மாறுகின்ற காட்சிகள் என ஒவ்வொன்றும் கவிதை சொல்கிறது...

கடலைகளின் தாலாட்டில் கரைந்துபோன
காலடி தடங்களை தேடி தேடி
தொலைந்துப்போனது
என் மனது!
கொட்டி கிடந்த ரம்மியங்களை
ஓடி ஓடி படம்பிடித்தது
என் ரசனை!

ரம்மியங்களை விவரித்து சொல்லும் கீழ் காணும் படங்கள் அனைத்தும் சென்ற ஞாயிறு அன்று என் கேமிராவில் க்ளிக்கியது.








காணும் காட்சியை ஓவியமாக்குபவர்...






 

 
வட்டமிடும் கடற்பறவை...






 








நிஜத்தில் மனம் கரைய..
கரையில் நிழல் கரைகிறது!
( படத்தில் நானும் என்னவரும்)