"பொண்ணு பாக்க போறோம்".......... தொடர் பதிவை எழுத அழைத்த (மாட்டிவிட்ட) அப்பாவி தங்கமணிக்கு எனது நன்றி! அவங்க சொன்னது இதுதான்...........நீங்க தங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க வந்த கதையையும்...ரங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க போன கதையையும்...இன்னும் கல்யாணம் ஆகலேன்னா எப்படி இருக்கணும்னு உங்களுக்குள்ள இருக்கற கற்பனையும் அள்ளி வீசுங்க.
நல்லவேளை, பெரிதாக கண்டிஷன்ஸ் எதுவும் இல்லை என்பதால் எண்ணங்கள் தடையின்றி வார்த்தைகளாக வர இதோ என் ஃப்ளாஷ்பேக்!
********
இந்தா இந்த பட்டு புடவையை கட்டிக்க
இல்ல எனக்கு இது வேண்டாம். எனக்கு பிடிச்ச சிறிய சரிகை வைத்து ப்ளுகலர் சாரிதான் கட்டுவேன்
சரி இந்த நகைகளை எல்லாம் போட்டுக்க
எனக்குதான் நிறைய நகைகள் போட்டுக்கறது பிடிக்காதில்ல எனக்கு இந்த ஒரு சின்ன ஜெயின் மட்டும் போதும்
சரி, கொஞ்சம் பூவையாவது அதிகமா வச்சிக்க
இல்ல எனக்கு எப்போதும் போல இரண்டுசரம் பூ போதும்மா
இதெல்லாம் என்னை பெண் பார்க்க வந்த போது (மாப்பிள்ளை பார்க்கும் முன்னும்) எனக்கும் என் அம்மாவிற்கும் நடந்த உரையாடலின் சிறு பகுதி!
என் பதிமூன்றாம் வயதில் இருந்து இருபத்தி இரண்டு வயதுவரை நிறைய proposals!!! லெட்டரில், போனில், நேராக என்று பலவிதத்தில் என்னை விரும்பியதாக சொன்னவர்களை சிநேகமான முறையில் விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டேன். காரணம் அவர்களில் யாரையுமே பிடிக்க வில்லை என்பது அல்ல! ஏனோ மனதிற்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கவில்லை! நிச்சயம் எனக்காக பிறந்தவர் சரியான நேரத்தில் என்னை தேடி வருவார் என்று நினைத்திருந்தேன். அவரும் என்னை தேடி வந்தார் பிரான்ஸில் இருந்து! சின்ன வயதில் இருந்தே எனக்கு எது பெஸ்ட் என்று பார்த்து பார்த்து செய்து, 22 வயதிலும் என்னை செல்லம் கொஞ்சிக்கொண்டு இருந்த என் அப்பா அம்மாவிடமே எனக்காக பிறந்தவரை தேடும் வேலையைக் கொடுத்து விட்டேன்.
கல்லூரி காலங்களில் தோழிகள் சிலர் பெண் பார்க்கும் சடங்கை பற்றி சொல்லி இருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவ பெண்ணான எனக்கு அவர்களை போல் அல்லாமல் சர்ச்சில் வைத்தே பெண் பார்ப்பது நடந்தது. மாப்பிள்ளையின்(என்னவரின்) குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக ஏற்கனவே என்னைப்பற்றி மாப்பிள்ளை வீட்டுக்கும், அவரை பற்றி எங்கள் வீட்டுக்கும் பறிமாறிக் கொண்டவைகளை வைத்தே இந்த பெண் பார்ப்பது(மாப்பிள்ளை பார்ப்பதும்) நடந்தது!
ஜூலை 30..... நானும் என்னவரும் பார்த்துக்கொண்ட முதல் நாள். நான் என் பொற்றோருடன் சர்ச்சிக்கு செல்ல எங்களுக்கு முன்னமே அவரும் அவர் அம்மா இன்னும் சில நெருங்கிய உறவினர்கள் என்று காத்துக்கொண்டு இருந்தார்கள். எங்களை பார்த்ததும் மாப்பிள்ளை வீட்டினர் நெருங்கி வர, ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்துக் கொள்வது நடந்தது.
நானும் என்னவரும் முதன்முதலில் பார்த்துக்கொண்ட சர்ச் இதுதான்!
"இதுதான் எங்க பொண்ணு" என்று அப்பா அவர்களிடம் சொல்ல எல்லோரும் என்னை பார்க்க நானும் புன்னகையுடனே மாப்பிள்ளையை "ஒரு பார்வை" பார்த்துவிட்டு தலை குனிந்துவிட்டேன். வெட்கத்தினால் அல்ல, என்ன செய்வது என்று தெரியாமல். என்னவோ அப்போதுதான் பார்ப்பது போல் என் ஒவ்வொரு கை விரல்களையும் நகங்களில் உள்ள நெயில் பாலிஷினையும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு தெரியாது அதே நேரத்தில் மாப்பிள்ளையாலும் என் விரல்கள் ரசிக்கப் படுகிறது என்று.
"இந்த பெண்ணின் கை விரல்கள் எத்தனை அழகாக இருக்கிறது. எவ்வளவு அழகாக நகங்களை வெட்டி ஷேப் செய்து, மென்மையான கலரில் நெயில் பாலிஷ் போட்டு இருக்கிறாள்"...... இதுதான் என்னை பார்த்த முதல் நொடி அவருக்குள் தோன்றியதாம்.
என் மகனுக்கு சரியா தமிழ் பேசத்தெரியாது(என்னவர் பிறந்தது பாண்டிச்சேரியில்தான் என்றாலும் சிறுவனாக இருக்கும் போதே அவரது குடும்பம் இங்கு வந்து விட்டது) என்று அவர் அம்மா சொன்னதை என் பெற்றோர் அவருக்கு தமிழே தெரியாது என்று புரிந்துக்கொண்டு, அவரிடம் இரண்டொரு வார்த்தைகளோடு முடித்துகொண்டு அவரின் அம்மா மற்றும் உறவினர்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். என்னமோ அவர்கள்தான் சேர்ந்து வாழப்போவதை போல அப்படி என்னதான் பேசினார்களோ தெரியாது. பாவமாக ஒருபுறம் நானும், பரிதாபமாக இன்னொருபுறம் அவரும் நின்றுக்கொண்டு இருந்தோம். எனக்கு மனதிற்குள் ஆயிரம் கேள்விகள்.... நானோ நான்- ஸ்டாப்பாக பேசிக்கொண்டிருப்பவள். எனக்கோ பிரெஞ்சு தெரியாது. இவருக்கோ தமிழ் சரியாக பேசத் தெரியாது பிறகு எப்படி பேசிக் கொள்வது? தெரியாத மொழியை கற்றுக்கொள்வது என்ன பெரிய விஷயமா என்று பின்பு நானே எனக்கு சமாதானம் சொல்லிக்கொண்டேன். எப்படியாவது அவருக்கும் தமிழ் கற்றுக்கொடுத்து விடலாம் என்று நினைத்துக்கொண்டேன். (இங்கு வந்து ஒன்றரை வருடத்தில் சரளமாக பிரெஞ்சு பேச கற்றுக்கொண்டேன். என்னவரும் நம் தமிழ் படங்களின் உதவியால் நன்றாகவே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். கொஞ்சம் எழுத படிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள் என்றால் தமிழ் மாதிரி ஒரு கஷ்டமான மொழி உலகத்தில வேறு எதுவும் இருக்க முடியாது என்று எஸ்கேப்பாகிறார்)
நீண்ட நேர உரையாடலுக்கு பின் மாப்பிள்ளைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்னை மிகவும் பிடித்திருப்பதாகவும், மேற்கொண்ட வீட்டிற்கு வந்து பேச விரும்புவதாகவும் சொன்னார்கள். எங்கள் வீட்டில் எனக்காக பார்த்த முதல் மாப்பிள்ளையே என் துணைவராக ஆனார். ஆனால் அவர் எனக்கு முன் இரண்டு பெண்களை பார்த்து பிடிக்காமல் போக, என்னை பார்த்ததுமே ரொம்ப பிடித்து விட்டதாம். எங்கள் வீட்டில் சம்மதம் சொல்ல சில நாட்கள் எடுத்துக்கொள்ள எங்கே நான் கிடைக்காமல் போய் விடுவேனோ என்று நினைத்து ‘எனக்கு இந்த பெண்தான் வேண்டும் எப்படியாவது அவளையே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்’ என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டாராம்.(விதி வலியது! வேண்டுதல் பலித்து என்வசம் மாட்டிக்கொண்டார்)
பெண் பார்க்க வந்த போது அவர் வீட்டில் இருந்து கொண்டு வரபட்ட தட்டு வரிசைகள்!
வீட்டிற்கு வந்ததும் தம்பியும் தங்கையும் மாப்பிள்ளை எப்படி இருந்தார், பிடிச்சிருக்கா? எப்படி டிரஸ் பண்ணிட்டு இருந்தாரு?....என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தேன் ! ஏன் என்றால் அப்போது அவர் முகம் கூட எனக்கு சரியாக நியாபகம் இல்லை. ஆனால் அவர் போட்டிருந்த லைட் பிங்க் கலர் சர்ட்டும் அவரின் ஆர்மி கட்டிங் ஹேர் ஸ்டைலும்தான் நியாபகம் வந்தது. (தனது 24 வயது வரை ஆர்மியில் அதுவும் Parachutist( skydiving) ஆக இருந்தவராம். மேலிருந்து குதிக்கும் போது ஏற்பட்ட மிக பெரிய விபத்து ஒன்றினால் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் இரண்டு வருடம் முன்னாலதான் ஆர்மியை விட்டு, வந்து விட்டதாகவும்... வெளியேறியப் பின்னும் பழக்க தோஷத்தினால்தான் இந்த ஹேர் ஸ்டைல் என்றும் தெரிந்துக் கொண்டேன்)
பின் இங்குள்ள என் உறவினர்களுக்கு அவரின் விவரங்கள் மெயிலிலும் ஃபேக்ஸிலும் அனுப்பி வைக்கப்பட்டது. Princess ஆக வளர்க்க பட்ட என்னை ஒரு நல்ல பிரின்ஸிடம் ஒப்படைக்க வேண்டுமே என்பதால் நிறைய விசாரிப்புகள். இரண்டு வாரத்தில் எல்லா விசாரிப்புகளும் முடிந்து ஒரு வழியாக என் வீட்டில் இருந்து, அவர்களுக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. பின்பு இங்கு இருக்கும் அவர் நெருங்கிய உறவுகள் இந்தியாவிற்கு பறந்து வர முறைப்படி அவர் குடும்பத்தார் என் வீட்டிற்குவந்து (இரண்டாவது முறையாக) பெண் பார்த்து விட்டு சென்றனர். மிக வேகமாக இரண்டு பேரின் வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் ஆரம்பமாகின. ஆகஸ்ட் 27 நிச்சயதார்த்தம் என்றும் செப்டம்பர் 6 திருமணம் என்று நாள் குறிக்கப் பட்டது. இந்த இடைபட்ட நாட்களில் என்னவர் தினமும் என்னை பார்க்க வந்து விடுவார். எனக்கே தெரியாமல் அவருடன் ஏதோ ஒரு உணர்வு ஏற்படத் தொடங்கிய நாட்கள் அது!
எங்கள் நிச்சயத்தார்த்தம் அன்று அவர் எனக்கு மோதிரம் போடும் போது எடுத்த படம்!
செப்டம்பர் ஆறு…. நானும் அவரும் திருமண பந்தத்தினால் இனைவதற்காக மதியும் மூன்று மணிக்கு சட்டபடி பதிவு திருமணம் நடந்து, மாலை ஐந்தரை மணிக்கு பாண்டிச்சேரி புனித சவேரியார் ஆலயத்தில், ரோமில் இருந்து வரவழைக்க பட்ட மாண்மிகு திரு கர்தினால்(Cardinal) தலைமையில் ஏழு பாதிரியார்களின் ஆசிர்வாதத்தோடு மிக சிறப்பாக எங்கள் திருமணம் நடந்தது. ஆலய திருப்பலிக்கு பின் ரிசப்ஷனுக்காக பாண்டிச்சேரி ஜெயராம் மண்டபத்தில் 1500 க்கு அதிகமான சுற்றமும் நட்பும் ஒன்றுகூடி வாழ்த்த மிக இனிதாக எங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தோம்!
நானும் அவரும் கையெழுத்திடுவது எங்கள் பதிவு திருமணத்தின் போது!
*********
சற்று நீண்டு விட்ட எனது கதையை பொறுமையுடன் படித்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த தொடர் பதிவை எழுதிட நானும் சிலரை மாட்டி விடலாம் என்று நினைக்கிறேன்.
இதோ அவங்கெல்லாம்......