உடலில் சோர்வு என்றால் நன்றாக தூங்கியோ உடற்பயிற்சியாலோ சரி செய்து விடலாம். ஆனால் மனது சோர்வுரும் நேரங்களில் என்ன செய்வது. அப்படிப்பட்ட சமயங்களில் ஏதாவது புதிதாக கற்றுக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில் புதியதாக ஒரு விஷயத்தை தெரிந்துக்கொள்வதிலும் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் ஏற்பட்டு நிச்சயம் மனதில் உற்சாகம் பெருகிடும். அப்படிதான் கடந்த இரண்டு மாதமாக நான் யோகா கற்றுக்கொண்டு வருவதும்.
நம் நாட்டில் இருந்தவரை அதைப்பற்றி ஏதும் தெரியாது, தெரிந்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் இல்லை. இன்று ஏதோ ஒன்று என்னை யோகா கற்றுக்கொள்ள தூண்டியது. நம் இந்திய நாட்டிற்கு பலமுறை வந்து முறைப்படி யோகா படித்து பட்டம் பெற்ற ஒரு பிரெஞ்சு பெண்தான் இந்த வகுப்புகளை நடத்துகிறார்.
உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்வது எனக்கு பிடிக்கும். அதனால் என் கல்லூரி நாட்களில் இருந்தே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் செய்ய மாட்டேன். சும்மா வீட்டிலேயே கையை காலை அசைத்து குனிந்து நிமிர்ந்து ஏதாவது செய்துக்கொண்டு இருப்பேன். உடற்பயிற்சி வெறும் உடலை மட்டுமா நன்றாக வைத்துக்கொள்ளும், மனதையும் சேர்த்துதானே! அது பற்றாத வேளையிலதான் இந்த யோகா பயிற்சி மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மனதில் தேவையில்லாமல் இருக்கும் கோபம், எரிச்சல், etc.,எதுவாகினும் அதை நீக்கிட யோகா உதவும் என்று நினைக்கிறேன். பொதுவாக நான் எளிதில் உணர்ச்சி வசப்பட மாட்டேன், முக்கியமாக கோபப்படும் விஷயத்தில். அவசியமற்ற கோபம் நம் மனதை அசிங்கமாக்கிவிடும் வாய்ப்புள்ளது. எனவே, நான் என் மனதை எப்போதும் அழகாக வைத்துக்கொள்வே விரும்புகிறேன், சில நேரங்களில் தானாகவே வந்து சேர்ந்திடும் சோர்வுகளை எதிர்த்து!
மனதிற்கு உற்சாகமும் சந்தோஷமும் கொடுக்கக்கூடிய இன்னொரு விஷயம் பரிசுகளும் பாராட்டுக்களும். தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தி வரும் பதிவுலக நண்பர்களின் பின்னூட்டங்களும், ஊக்கப்படுத்திவரும் விருதுகளும் இன்னும் என் சந்தோஷத்தை அதிகப்படுத்தி மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கிறது. மீண்டும் ஒரு தங்கமகன்/மகள் விருது தந்த ஜெய்லானிக்கும், அனபாக ஒரு விருது அளித்த ஆனந்திக்கும் எனது நன்றிகள்.









