நெற்றியில் பதிந்த என்னவரின் அழுத்தமான முத்தத்தினால் அழகாக விடிந்தது எனது பொழுது. பிறந்த நாள் என்றாலே எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் மனது சந்தோஷம் கொள்கிறது.
எனக்கும் அப்படிதான்! எழுந்ததில் இருந்து சொந்தங்கள், நண்பர்களின் தொலைபேசி அழைப்புகளினாலும், மெயில்கள் மற்றும் பதிவின் மூலமாகவும் வாழ்த்துக்களை பெற்ற மகிழ்ச்சியில் காலையில் கோவிலுக்கு சென்றேன். மாதாவின் பெருவிழா என்பதால் ஒன்பது பாதிரியார்களின் ஆசிர்வாதத்தில் திருப்பலி கண்டு மகிழ்ந்தேன்.
கஷ்டப்பட்டு நான் சமைத்த பிரியாணியும் சிக்கன் 65யும் மதியம் சாப்பிட்டு முடித்து, இரண்டு மணி நேரம் அப்பா அம்மாவுடன் சாட்டிங்கில் பேசிக்கொண்டே அவர்கள் முன்னால் கேக் கட் பண்ணி, ( நானே செய்த கேக் இது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்)அவர்களுக்கும் சேர்த்து நானே சாப்பிட்டுவிட்டு, மாலை என்னவருடன் கடற்கரைக்கு பயனமானேன்.
கடற்கரை சுற்றிலும் நிரம்பி இருந்த ஜனநெருக்கடியில் நானும் ஒருத்தியாகி, தொலைந்து போகாமல் இருக்க என்னவரின் கையை இறுக்க பிடித்துக் கொண்டேன். இதமாக காற்றில் அசைந்தாடும் படகில், கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துக்கொண்டு இருக்கும் சூரியனின் ஒளிக்கதிர்கள் தண்னீரில் பட்டு ஜொலிக்கும் அழகை என்னவரின் தோலில் சாய்ந்து கொண்டு முப்பது நிமிட படகு பயணத்தை ரசித்தேன்.
வழக்கம்போல் கடற்கரை உணவகங்களில் நீண்ட வரிசை! காத்திருக்க பிடிக்காமல் என்னவருக்கும் எனக்கும் பிடித்த சைனீஸ் ரெஸ்டாரண்ட்டில் இரவு உணவை முடித்து, கடலில் நடைபெற்ற வான வேடிக்கையினை கண்டு மகிழ்ந்தேன்.
நள்ளிரவு தாண்டியும் சோர்வடையாமல் மொய்க்கும் மக்கள் கூட்டத்தில் நான் மட்டும் கொஞ்சம் சோர்வடைந்துப் போனேன். அங்கிருந்த நீண்ட டிராஃபிக்கை சிரமப்பட்டு தாண்டி வீடு வந்துசேர 2 மணி ஆகிவிட்டது.
சிறுமியாக இருந்தபோது பிறந்த நாளில் புது டிரஸ் கிடைத்தாலே சந்தோஷம், பள்ளி வயதில் தோழிகளின் வாழ்த்து அட்டைகள் வந்தாலே சந்தோஷம், கல்லூரி பருவத்தில் தொலைப்பேசியில் வரும் வாழ்த்துக்களினால் சந்தோஷம், திருமணம் முடிந்ததால் என்னவரின் காதல் பரிசுகளில் சந்தோஷம் என்று இன்று வரை என் ஒவ்வொரு பிறந்த நாளும் ஏதாவது ஒரு வகையில் சந்தோஷத்தால் நனைந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த வருடம் பதிவுலக நண்பர்களும் இணைந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி!
ஆனால் இவற்றால் மட்டும் மனது முழு சந்தோஷத்தை அடைந்து விடுகிறதா… இந்த கேள்வியால் ஏனோ உண்மையான சந்தோஷத்தை மனது தேட முயற்சிக்கிறது. ஏதாவது கஷ்டப்படும் ஏழை சிறுவர்களுக்கு உதவிட வேண்டும் என தோன்றியது. அதன் தொடக்கமாக நேற்று பாண்டிச்சேரியின் முக்கிய வீதி ஒன்றில் நடைப்பாதையில் வசிக்கும் குடும்பத்தில் உள்ள 4 வயது சிறுவனுக்கு ஆடைகள், செருப்பு, நோட்டு புத்தகங்கள், பென்சில்கள், இனிப்பு கூடவே கொஞ்சம் பணமும் கொடுத்து மகிழ்ந்தேன். நேரடியாக என்னால் அதை செய்ய முடியாமல் போனதில் சின்ன வருத்தம்தான். ஆனால் பொருட்களை பெறும் போது கிடைத்த மகிழ்ச்சியினை புன்னகையால் அச்சிறுவன் வெளிப்படுத்தியதை என் தம்பி புகைப்படமாக்கி அனுப்பி இருந்தான். பார்த்து சந்தோஷம் அடைந்தேன்.
பிறந்த நாளில் மட்டும் இல்லாமல் தினசரி நிகழ்வுகளின் மூலமாக நிறைய சந்தோஷங்களை அள்ளி கொடுக்கும் இறைவனுக்கு 'நன்றி' என்று ஒற்றை சொல்லில் முடித்துவிட முடியுமா?
இனி வரும் பிறந்த நாட்களில் ஒரு சிறுவனுக்கு உதவிடும் நிலை மாறி இன்னும் கஷ்டப்படும் சில சிறுவர்களுக்கு ஏதோ என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை தொடர்ந்து செய்ய நல்ல மனதை அளித்திடுமாறு இறைவனை வேண்டுகிறேன்.